Pages

Friday, December 28, 2007

மரணத்தை வென்றவன்...

நொடியினில் தோன்றிடும் மரணத்தையே
வென்றவன் யாரது நீ சொல்லடா
தடைகளைத் தாண்டியே விடுபடவே
கற்றவன் யாரோ அவனேயடா!

தினசரி வாழ்க்கையை நிதம் எண்ணியே
நொந்திடும் மனிதன் யார் சொல்லடா
விதியதை நம்பியே வாழ்க்கையினை
வீதியில் விட்டவன் அவனேயடா!

விடியலைத் தேடியே வாழ்க்கையினை
வென்றவன் யாரு நீ சொல்லடா
வெயிலிலும் மழையிலும் பனியினிலும்
உழைத்திடும் வர்க்கம் அவனேயடா!

அலைந்திடும் மனதினை ஒருமனதாய்
அடக்கிடும் மனிதனை நீ சொல்லடா
நிலைதனை உணர்ந்திட்ட வாழ்க்கையினை
வாழ்ந்திட தெரிந்தவன் அவனேயடா!

அறத்தொடு பொருளும் இன்பத்தையும்
காத்திட தெரிந்தவன் யார் சொல்லடா
பிறப்பிலே மேன்மையை பழகிடவே
இறப்பிலும் தொடர்பவன் அவனேயடா!

- காகிதன்