Pages

Sunday, November 25, 2012

இயற்கையின் பயணம்

அன்பு சகோதர, சகோதரிகளே! உங்களுடன் பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயற்கையோடு மனிதனுக்குள்ள தொடர்பைப் பற்றி சுருக்கக்கூறி இக்கட்டுரையைப் பயணத்திற்குட்படுத்தியிருக்கிறேன்.

பயணம்
வியக்கத்தக்க அதிசயங்களுடன் அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமிப்பந்தின் மேல் அற்புதப் படைப்புதான் மனிதன். யார் இந்த மனிதன்.. இவன் எப்படி தோன்றினான்? இந்த பூமியில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? இவை அனைத்தும் புரியாத புதிராகவே உள்ளன. மனிதன் என்பவன் கடவுள் வாழும் ஆலயம் எனக் கூறுவார்கள். கடவுள் யார்? ஓர் அணுவைப் பொருள் என எடுத்துக்கொண்டால், அந்த பொருளுக்குள் மூலக்கூறு இல்லாமல் இருக்காது. மூலக்கூறு இல்லாமல் அவை இயங்கவும் முடியாது. இப்படி ஒவ்வொரு அணுக்கூறையும் ஆராய்ச்சிக்குட்படுத்தி, அவற்றிற்குள் கடந்து சென்றால் முடிவில்லாமல் தொடர்ந்து போகிறது. இப்படி முடிவில்லா தொடர்பு கொண்ட சக்தி அணுவாகி, அணு இயக்கம் பெற்று, ஒன்று பலவாக பிரிந்து, பிரிந்தவைகள் ஒன்றோடு ஒன்று வேறு வேறு விகிதாசாரத்தில் கலந்தும், இழந்தும், புதிய புதிய பொருள்கள் பரிணமித்து இப்பிரபஞ்சம் தோன்றி வளர்ந்துள்ளது. முடிவில்லா பேராற்றல் கொண்ட மூலசக்தியைக் கடவுள் எனக் கூறலாம்.

இப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் மூலக்கூறு இருக்கிறபடியால் கண்ணுக்குத் தெரியாத பொருள் கண்ணுக்குத் தெரியும் பொருளாக உருவெடுத்துள்ளது. இப்படி தோன்றுவதற்குக் காரணம் அணுவின் கூட்டுச் சேர்க்கையே. இதனால் கடவுள் என்னும் மூலப்பொருள் இல்லாத இடமே இல்லை என்றும் கூறலாம். இப்படி பார்க்கும்போது கடவுள் என்னும் மூலப்பொருளே வளர்ந்து சிதைந்து பின் கூடி நிலமாக, நீராக, நெருப்பாக, வாயுவாக, ஆகாயமாக, மொத்த பூதமாக விரிந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்து நூண்ணுயிர்களாக மாறி பரிணமித்து சகல உயிரிகளாக வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிறது.

பஞ்சபூசங்கள் உருமாற்றத்திற்குட்படும்போது, அவற்றில் சிக்கிய நுண்ணியிரிகள் அழிய நேரிட்டது. எஞ்சிப் பிழைத்த உயிரிகளின் கூட்டுச்சேர்க்கையால் புதிய நுண்ணுணர்வு கொண்ட உயிர்கள் பிறப்பெடுத்தன. அவை இயற்கையின் தட்பவெப்ப மாற்றங்களில் தன்னைக் காத்துக்கொள்ள விடாது முயற்சித்து தன் உணர்ச்சியின் போராட்டத்தால் உணர்வெனும் மூலக்கூறே அறிவாக வளர்ந்தது. (அறிவு என்பது தன் உணர்வுகள் மூலம் ஒரு விஷயத்தைக் கற்பது)

இப்படி உயிர்களின் அறிவின் பெருக்கத்தால், தட்பவெப்பத்திற்கு ஏற்ப தன்னைக் காத்துக்கொள்ள முற்பட்ட உயிர்கள் புதிய உறுப்புகளைப் பெற்றன. இதன்மூலம் இயற்கையின் ஆளுகையைப் புரிந்து அதிலிருந்து தம்மைக் காக்கவும், இணங்கி வாழவும் கற்றுக்கொண்டன.

இயற்கையின் உருமாற்றத்தில் பாதிக்கப்படும் உயிரினங்கள் தப்பிப் பிழைக்க முற்பட்டவையே, இனவிருத்தி மூலம் புதிய உடல் அமைப்பும் புத்திக் கூர்மையும் உள்ள வேறுபட்ட உயிரினங்கள் பரிணமித்து ஓர் அணுவில் தோன்றி ஐந்தறிவு விலங்குகளாவதற்கு பல கோடி ஆண்டுகளை எடுத்துக்கொண்டன என ஆராய்ச்சி கூறுகிறது.

ஐந்தறிவு விலங்கின் ஒரு வகை குரங்கே மனிதனாக வளர்ந்துள்ளது. இவன் முறையே ஆதிமனிதன், காட்டுவாசி, கிராமவாசி, நகரவாசி, விஞ்ஞானவாசியாக வளர்ந்துள்ளான். எனினும் உலகில் தோன்றிய முதல் உயிர் முதல் கொண்டு வளர்ச்சியடைந்த கடைசி உயிரினம் வரை உள்ள அனைத்து உயிரினங்களின் குணாதிசயங்களையும் மனிதன் அறிவாக பெற்றுள்ளான் என்றால் அது மிகையாகாது. எனவே, பல உயிர் மூலக்கூறுகளின் கூட்டமைப்பே மனிதன் எனலாம்.

இப்படி பல உயிர்களின் உணர்ச்சியையும் குணங்களையும் கற்பனையாகப் பெற்ற மனிதன், இவ்வறிதலின் மூலம் சிந்திக்கத் தொடங்கினான். சிந்தனையின் தொடர்ச்சி மனசாக வளர்ந்து, மனசின் முடிவு நினைவுகளாக மூளையில் பதிந்தது. இதுவே மனிதனின் சந்ததி வளர்ச்சியில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலங்களைப் பற்றிக் கவனிக்கவும், அறியவும் உதவியது. பின் எண்ண அலைகளைக் கணிதமுறைப்படி அலசியாராய்ந்து தீர்க்கமான முடிவெடுக்க கற்றுக்கொண்டான். இது நாளாவட்டமாக இவனை பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவுக்குள் நடத்தியது. மனிதனைப் பொறுத்தவரை அறிவு என்பது இவனாக ஏற்படுத்தியது என்று நினைக்கிறார்கள். ஆனால் உயிரினங்கள் தன்னை இப்பூமியில் காத்துக்கொள்ள போராடியபோது தன் உணர்வின் அனுபவத்தையே இவனுக்குள் அறிவாகக் கொடுத்துள்ளது. எனவே இவனுடைய அறிவுக்காக இவன் மேட்டிமை பாராட்ட வேண்டியதில்லை. இன்னிலையில் மனிதன் தன்னைத் தகவமைக்க எவ்வளவு போராடினாலும், இயற்கையை பொறுத்தவரை மற்ற உயிர்ராசிகளைப் போலவே மனிதனுக்கும் மரணத்தை நிர்ணயிக்கிறது. இயற்கையின் பார்வையில் மனிதனும் சாதாரணமானவனே.


மனிதனைப் பற்றிச் சில

ஆதியிலே மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும், உணவுக்காக வேட்டையாடவும் தன் நகங்களையும் கற்களையும், கட்டைகளாடும் ஆயுதமாக பயன்படுத்தினான். ஆயுதமே மனிதன் முதல் பயன்படுத்திய கண்டுபிடிப்பு. ஆயுதங்களைக் கொண்டு உணவை வேட்டையாடவும், பின் சேகரிக்கவும் ஆரம்பித்தான். இச்செயலை இனப்பெருக்க காலத்தின் போதும் குழந்தை வளர்ப்பு காலத்தின் போதும் தேவைக்கேற்ப சேமிக்கக் கற்றது மனுசியே. மனுசியே உணவைச் சேகரிக்கவும் பங்கிடவும் கற்று முதலில் நிர்வாகத்தைத் தொடங்கினாள். பின் மனுசனை தன்னுடன் சேர்த்து வாழப்பழகி, ஆணும் பெண்ணுமாகக் கூடிக் குழுக்களாக வாழ்ந்தனர். பின் வேட்டையாடும் பொருள்களைப் பாதுகாப்பதிலும் பங்கிடுவதிலும் சிக்கல் ஏற்படவே, குழுக்களுக்குள் ஒருவரை பொதுவானவராக நிர்ணயித்தனர். உபரி சேமிப்புக்களை கையாளுவதில் பிரச்சினை ஏற்படவே, இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து இடம் விட்டு இடம் நகர்ந்து தங்கி இனவிருத்தி செய்து வாழ்ந்தனர். இப்படி குழுக்களாகச் சிதறுண்டு வாழ்ந்த மக்கள் கூட்டம் இடத்திற்கு ஏற்ப தட்பவெப்பத்திற்கும் ஏற்ப நிறத்தாலும், தோற்றத்தாலும், குணத்தாலும், மொழியாலும் வாழ்க்கை முறையிலும் மாறுபட்டு வளர்ந்தனர். பெரும்பான்மையான மக்கள் கூட்டங்கள் தன் தேவைக்கு ஏற்ப வேட்டையாடுதல், மீன் பிடித்தல், வீட்டு விலங்குகள் வளர்த்தல், விவசாயம் எனப் பல தொழில்களைக் கற்றனர். ஆங்காங்கே வாழ்ந்த மக்களின் சேகரிப்பிலும், வளமையிலும் கவனம் வைத்த குழுத் தலைவர்கள், இரு குழுக்களிடையில் சண்டையிட்டு பொருள்களை அபகரிக்கவும், இடங்களை கைப்பற்றவும், மக்களை அடிமைப்படுத்தவும் தொடங்கினர்.

இதில் கைப்பற்றியவர்கள் ஆண்டான்களாகவும், பிடிபட்டவர்கள் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். நாளாவட்டமாக அடிமைகளுக்கு பாலியல் உறவுகள் மறுக்கப்பட்டதால் அடிமைகள் கூட்டமாக தற்கொலை செயல்களில் ஈடுபட்டனர். இச்செயல் ஆண்டான்களுடைய வேலைகளுக்கு தடையாய் இருந்தபடியால், அடிமைகளுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டு பெண்களுடன் கூடி வாழும் குடும்பமும் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் ஆண்டான்கள் தம் ஆசைக்கும் தேவைக்கும் ஏற்ப சில சலுகைகளை மீறவும் பலவந்தபடுத்தும் செயலிலும் ஈடுபட்டனர். இதனால் ஆண்டான் அடிமைகளுக்கிடையில் சண்டை மூண்டது. பிரச்சினையை சமாளிக்க இருசாரரும் சேர்ந்து, ஆங்காங்கே பிடிபட்ட அடிமைகளின் தோற்றம், குணம், தொழில் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப இனவாரியாக பிரித்து புதிய சமுதாயத்தை உருவாக்கினர். இதில் ஆண்டவர்களாக இருந்தவர்கள் நிலபிரபுவாக, பண்ணையாராக, ஜெமிந்தாராகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் விளங்கினர். இவர்கள் மக்களின் தொழில்மூலம் அதிக பொருள்களின் மதிப்பைப் பெற்று பெரும் பலவான்களாக திகழ்ந்தனர். அதிக உழைப்பில் ஈடுபடும் மக்கள் சலிப்படையாமலும், எண்ணம் திசைத்திரும்பாமலும் இருக்க அவர்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் ஏற்ப வெகுமதிகளையும், உரிமைகளையும் கொடுத்து தன்வயப்படுத்திக்கொண்டனர். இச்சூழலில் சமூகத்தினர் கலை நுணுக்கங்களைத் தமக்குச் சாதகமாகவும், கலை கற்ற சமூகத்தினரை திருப்திப்படுத்தவும் அவர்களை ஊக்குவித்து போட்டிகளை நடத்தி வந்தனர். அதனால் சிற்பக்கலை, ஓவியம், இசை, பாட்டு, நடனம், நாடகம் என மனிதன் கலைநயத்துடன் வாழவும், அழகை இரசிக்கவும், நேசிக்கவும் தொடங்கினான்.

பொழுதுபோக்காக உருவான கலைகள் நாளாவட்டமாக பிழைப்பாக மாறியது. கலைஞர்களாக சமூகங்களுக்குள்ளே இடம் நகர்ந்தவர்கள் பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தைத் தொடங்கினர். இது ஒரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைக்கு வழிவகுத்தது. பண்ணையார்களுக்கிடையில் போட்டி நிலவியதால் சமூகங்களுக்கிடையே போர் மூண்டது. குடும்பகளாக உறவுகளை வளர்த்து வாழ்ந்த மக்களிடையே கொலை, கொள்ளை, இடஅபகரிப்பு என வருந்தத்தக்க செயல்கள் நடந்தன. இதனால் போருக்குப்பின் அரசாட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில் குடும்பம் குட்டிகளை இழந்து, உறவுகளை இழந்து வாழ்ந்த சிலர், மனவிரக்தியில் சமூகம் ஏன் இப்படி உள்ளது? மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மனிதன் யார்? இயற்கை பொருள் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவ்வினாவிற்கு விடைகாண ஏன், எதற்கு, எப்படி, என ஆழ்ந்த சிந்தனையிலும் தியானத்திலும் அமர்ந்தனர். அப்போது விண்ணைப்பற்றியும், வெளியைப்பற்றியும், அவற்றின் சக்தியையும், அவை நம்முடன் எப்படி தொடர்புடையன என்பதைப் போன்ற அரிய பல விஷயங்களை அறிந்தனர். இவர்களின் மனதில்பட்ட நுண்ணிய கண்டுபிடிப்புகளை மக்களிடம் சொல்ல முற்பட்டபோது இது அவர்களுக்கு புரியவில்லை. எனவே மக்கள் தினசரி பார்த்தும், கேட்டும் அனுபவித்தும் உள்ள பொருள்களைக் கொண்டே மனித உருவங்களை வைத்தே நம்மைக் காட்டிலும் அரிய சக்கதியே இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது என உணர்த்தினர்.

இதையே தெயமவீகம் ஆன்மீகம் என வலியுறுத்தினர். இச்செயல் மக்களை நல்வழிப்படுத்தவும், ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தருவதாகவும் இருந்தபடியால், அரசர்கள் தெய்வீகத்தை ஆதரித்து, கோயில்கலையும் ஆலயங்களையும், மசூதிகளையும் தோற்றுவித்தனர். இவை முறையே கர்மமார்க்கம், பத்திமார்க்கம், யோகமார்க்கம், ஞானமார்க்கம் என சமயங்கள் தோன்றி வேதங்கள் உருவாகின. இருப்பினும் புலனுணர்ச்சிகளுக்கு அடிமைகளாக வாழ்ந்த மக்களாலும், மக்கள் தலைவர்களாலும் இந்த அரிய கண்டுபிடிப்புகள் வெறும் சடங்காசாரமாகவே, மேலோட்டமான மக்கியாகவே இருந்துவிட்டது.

எனினும் ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் இயற்கையின் அழிவிற்கு பின்னும் மக்களின் போருக்கும் பின்னும் புதிய அனுபவம் பெற்று தெய்வீக சக்தியின் இரகசியத்தை அறிவியல் முன்னேற்றமாகப் பெற்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளுடன் நவீன உலகத்திற்குள் நுழைந்தது.

இதில் கவனிக்க வேண்டியவை என்னவெனில் புலன்களுக்கு எட்டாத மானசீக கண்டுபிடிப்பாகிய விண்ணைப்பற்றியும், வெளியைப்பற்றியும், அதன் சக்தியைப் பற்றியும் கூறும் தெய்வீகம் எனும் மெய்ஞானமே, மனிதனுக்குள் பரிணமித்து புலன்களுக்கு புலப்படும்படியான செயற்கை கண்டுபிடிப்பாக மாறி விஞ்ஞானம் எனும் பெயர் பெற்றது.

மனிதன் மானசீக அறிவை தெய்வீகமாக பெற்றபோது அதற்கு பயந்து, மதித்து அதனுடன் ஒத்தும் வாழ்ந்தான். இதனால் அதற்கு அன்பு, பண்பு, பாசம், பெருந்தன்மை, அமைதி என்று நிதானமாக இயற்கையை நேசித்தும், அதனுடன் இணங்கியும் வாழ்ந்தான். இவ்வாழ்க்கைமுறையால் மக்கள் வறுமையில் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இப்போதோ தெய்வீக நுண்ணிய சக்தியே புலனுக்கு எட்டும்படி இயந்திரமாகவும், நுண்ணாற்றல் கொண்ட சாதனங்களாக மக்கள் வாழ்க்கையில் மலிந்தும், குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள்போல் உபயோகிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஆசைக்கும் தேவைக்கும் ஏற்ப, செயற்கைப்பொருளின் உற்பத்திக்காக தெயவீகஆற்றல் கொண்ட மூலப்பொருள்கள் இப்பிரபஞ்சத்தில் இருந்து உருமாற்றம் பெற்று வருகின்றன. இதனால் நெடுங்காலம் புதைந்திருந்த இயற்கை வளங்கள் பூமியில் குறைவுபடுகின்றன.

இயற்கை தன் வளங்களை நிரப்பிக்கொள்ள தன் சுழற்சி மாற்றங்களை சரியாகச் செய்தாலும் மனிதனுடைய தேவைக்கு அது போதவில்லை.

மனிதனின் உடலும், உயிரும் ஐம்பூதத்தின் ஆரோக்கியத்துடன் தொடர்புகொண்டு வாழ்கிறது. இவனோ மனிதர்களிடையே தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள , இயற்கையுடன் தொடர்பு கொள்ளாமல், சமூகத்தில் நிலவும் போட்டிகளுடன் தன் அறிவை தொடர்பு படுத்துகிறான். இதனால் இயற்கையை செயற்கையாக்க முற்படும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுகள், உயிரினங்கள் வாழ்க்கைக்கு ஒவ்வாத நச்சுக் கிருமிகளாக இப்பிரபஞ்சத்தில் கலக்கின்றன. இவை ஐம்பூதங்களுடன் சேர்ந்து புதிய நுண்கிருமிகளாக மனித குலங்களையும், நம்மை அண்டி வாழும் உயிரினங்கழையும் நோய்க்குட்படுத்துகின்றன. இதனால் மனிதன் பெரும்பாலும் வலியோடும், வேதனைகளோடும், மனக்குழப்பத்துடனும் வாழ நேரிடுகிறது.

பிரபஞ்சத்தை பொறுத்தவரை மனிதர்கள் இப்பூமியில் இருந்தேயாக வேண்டும் என்பது கட்டாயமல்ல. எப்படியெனில் இந்து சமயத்தில் கூறுவதைப்போல் ஆக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் என்னும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் எனத் தன் செயலை நடத்தி முடிவில்லா பயணத்தை இப்பிரபஞ்சம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் பொறுத்தவரை இப்பிரபஞ்சத்தின் அணுக்கிரகமும், அதன் ஆரோக்கியமும் இருந்தேயாக வேண்டும். இல்லையேல் மனிதகுலம் மறைந்து புதிய பரிணாமம் இப்பூமியில் நிகழும்.

நமக்காகவும், நம் பின் வரும் சந்ததியினருக்காகவும் பொருள்களை சேர்த்துவைக்க நினைக்கும் மானுடர்களின் நிலை, அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்ட நினைப்பதற்குச் சமம். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்சத்துக்குள் ஒன்றை ஒன்று நாடி நிற்கின்றன. இதில் மனிதர்கள் மட்டும் தான் உருவாக்கிய குடும்பம், கலாசாரம், சமயம், கலை அரசியல் என பல விஷயங்களுக்காக அதிகம் இப்பிரபஞ்சத்தை நாடி நிற்கின்றனர். அறிவியல் முறைப்படி விஞ்ஞான பொருட்களை ஆக்கத் தெரிந்த மனிதனுக்கு, அப்பொருளுக்கான மூலக்கூறுகளை (பிரபஞ்சசக்தியை) ப் பாதுகாக்க கற்பதற்குமுன் அழிக்கக் கற்றுக்கொண்டான் என்பது வருந்தத்தக்கதே.

இதில் கவனிக்க வேண்டியவை என்னவெனில் ஆன்மீகம், துறவு என்று மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்க வேண்டியவர்கள் கூட உலகில் உள்ள பெரும்பான்மையான கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் பின்பற்றும் மக்கள் மட்டும் எதைத் துறப்பார்கள்? அவர்களும் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய தெய்வத்தை வணங்குகிறார்கள்.

தெய்வீக அருளைப் பெற ஐம்பூதங்களின் பரிசுத்தமும், ஆரோக்கியமும் இன்றியமையாதவை. இவை மனிதர்களின் பயன்பாட்டு பொருள்களால் மாசுபட்ட பிறகு, மனிதன் இல்லாத இடத்திற்கு தெய்வம் நகர்ந்து சென்றுவிடும். ஒட்டு மொத்த உலகமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதால்தான் பிரபஞ்சத்தின் கழிவுகளையும் வேறு உயிர்களின் உணவாக மாற்றி, என்றும் தன்னை ஆரோக்கியமாக்க முற்படுகிறது இயற்கை.

எனவே மனிதர்கள் பயன்படுத்தும் ஏனைய பொருள்களில் இருந்து வெளிவரும் கழிவுகள், கெட்ட கிருமிகளுக்கு உணவாக மாறுவதால் அவைகளும் கொழுத்து செழித்து இனப்பெருக்கம் அடைந்து அறியா மக்களின் உயிரை உண்ண முற்படுகிறது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பார்கள்! ஒற்றுமை இல்லாத காரணத்தால், ஒரு தனி மனிதனுக்கே உலகில் உள்ள அனைத்து பொருள்களும் தேவை என்ற ஆசை வளர்ந்துள்ளது. இப்படி மனிதனை திருப்திபடுத்த முயன்றால், பெரும்பாலான இயற்கை வளங்களும், பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். எனவே விஞ்ஞானம் எனும் தெய்வீக சக்தியை வீண் விரையம் செய்யாமல், ஒவ்வொரு தனிமனிதனும் அக்கறை கொண்டால் மனிதகுலம் உடலாலும், மனதாலும் ஆரோக்கியம் அடையும் என்பது நிச்சயம். விஞ்ஞானம் என்னும் மகாசக்தியை அவசரத்திற்கும், நிர்பந்தத்திற்கும் ஏற்ப சில பொது உடைமைகளுக்கு மட்டும் பயன்படுத்தவும், செலவிடவும் கற்றுக்கொண்டால் நாம் எளிமையான வாழ்க்கைக்குள் பயணப்படுவது தெரியவரும். எளிமையான வாழ்க்கை மனிதனுடைய உடல், உயிர், ஆவி இம்மூன்றையும் செழிப்பாகவும், சந்தோஷமாகவும் வைக்கும் என நமபுகிறேன். எனவே தனிமனிதனின் எளிமை நாட்டின் (பிரபஞ்சம்) வளமை எனக் கருதி இம்மனுவை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


நன்றி

வாழ்க வளமுடன்

அன்புடன்
பா. கணேஷ் அவர்களுக்காக

காகிதன்